Sunday, May 1, 2011

வெண்கலக் குரலோன் தெய்வத் திரு சீர்காழியின் ஆண்டுக்கு ஆண்டு சுபதினம்

வெண்கலக் குரலோன் தெய்வத் திரு சீர்காழியின் சுபதினம்

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்

வள்ளுவன் பிறந்து குறளைச் சொன்னால் அறிவுக்கு அது தான் சுப தினம்
வள்ளுவன் பிறந்து குறளைச் சொன்னால் அறிவுக்கு அது தான் சுப தினம்
புத்தன் பிறந்து போதனை செய்தால் அன்புக்கு அதுதான் சுபதினம்
புத்தன் பிறந்து போதனை செய்தால் அன்புக்கு அதுதான் சுபதினம்

காந்தி பிறந்து விடுதலை தந்தார் காந்தி பிறந்து விடுதலை தந்தார்
உரிமைக்கு அதுதான் சுப தினம்

ஒருவன் துணிந்து தியாகம் செய்தால்
உலகுக்கு அதுதான் சுப தினம்

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்


நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கு அதுதான் சுப தினம்
நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கு அதுதான் சுப தினம்
உழுதுண்டு வாழும் மக்களுக்கெல்லாம்
அறுவடை நாளே சுப தினம்
உழுதுண்டு வாழும் மக்களுக்கெல்லாம்
அறுவடை நாளே சுப தினம்

லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
கிடைத்தவருக்கு அது சுபதினம்
லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால்
கிடைத்தவருக்கு அது சுபதினம்
வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால்
எளியவர்க்கெல்லாம் சுப தினம்

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுப தினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம்.

--------------------------------------------------------------------------------------------------------
இம்மேதின நன்னாளில் தொழிலாளர் அனைவரும் நலம், வளம் பெற்று வாழ இறைவனை துதிப்போம். 
............................................................................................................................................................

Wednesday, April 27, 2011

ஸ்ரீ ராமன் துதி

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்றிரண்டே ழுத்தினால்.

நாடிய பொருள்கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழிய தாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையி ராமன் தோள்வலி கூறு வோர்க்கே.


மும்மைசால் உலகுக் கெல்லாம் மூலமந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தாமே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்துமாம் இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டார்.

Tuesday, April 26, 2011

ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்.

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா by MSS



மூதறிஞர் ராஜாஜி அவர்களிய 
குறை ஒன்றும் இல்லை 

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா 
குறை ஒன்றும் இல்லை கண்ணா 
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா 

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா 
குறை ஒன்றும் இல்லை கண்ணா 
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா 

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா 
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு 
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா 

வேண்டியதை தந்திட வேங்கடேஸன் நின்றிருக்க 
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா 
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா 

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - கண்ணா 
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா 
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்  
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா 
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் 
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா 
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா 

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா 
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா  
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா 

கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி 
நிலையாகக்  கோயிலில் நிற்கின்றாய் கேசவா 
கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி 
நிலையாக கோயிலில் நிற்கின்றாய் கேசவா 

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாரும் மறுக்காத மலையப்பா 
யாரும் மறுக்காத மலையப்பா -உன் மார்பில் 
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை 
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு 
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு 
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா  
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா 
கோவிந்தா கோவிந்தா  
கோவிந்தா கோவிந்தா  
கோவிந்தா கோவிந்தா

Friday, April 22, 2011

நாளும் கோளும் நன்மை செய்ய

கந்தர் அலங்காரம்:
நாள் என் செயும்: வினை தான் என் செயும்  
எனை நாடி வந்த கோள் என்செயும்
கொடுங்கூற்று என்செயும் -குமரேசர்
இரு தாளும் சிலம்பும் சதங்கையும்
தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே !!

(கந்தர் அலங்காரம் 38  நாள் என்செயும்  )

கோளறு பதிகம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.  

திரு ஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்களில் இரண்டாம் திருமுறையில் கோளறு பதிகம் எனும் தலைப்பில் பாடப் பெற்ற நூலின் முதல் பாடல். நவகோள்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காப்பாற்றும்.
திருச்சிற்றம்பலம்


 

 
குளிகையில் எதிர்மறையான செயல்களை செய்ய கூடாது.
முகூர்த்த லக்னத்தில் ராகு-எமகண்டம் குளிகை நேரம் தவிர்க்கப் பட வேண்டும்.
திருமணத்திற்கு முகூர்த லக்னம் குறிக்கும் போது அந்த நேரத்தில் ராகு காலம்-எமகண்டம் மட்டுமின்றி குளிகை நேரமும் வரக் கூடாது.
குளிகை நேரத்தில் முதன் முதலாக ஒரு செயலை செய்தால் அதை மீண்டும் செய்ய நேரிடும். நம் வழ்க்கையில் எவை எல்லாம் மறுபடியும் நடந்தால் நல்லதோ அவற்றை மட்டும் குளிகையில் செய்ய வேண்டும். சொத்து வாங்குவது, கிரஹபிரவேசம் செய்வது,வெள்ளி, பொன் நகைகள் வாங்குவது, சேமிப்பு துவங்குவது, கடன் அடைப்பது, வெளி நாடு செல்வது போன்றவை செய்தால் அவை மீண்டும் மீண்டும் நடக்கும்.

Tuesday, April 19, 2011

தெய்வப்புலவர் கம்பரின் சரஸ்வதி அந்தாதி

சரஸ்வதி அந்தாதி தெய்வ புலவர் கம்பர்.


காப்பு
ஆய கலைக ளறுபத்து நான்கினையும்
ஏய வுணர்விக்கு மென்னம்மை - தூய
வுருப்பளிங்கு போல்வாளென் னுள்ளத்தி னுள்ளே
யிருப்பளிங்கு வாரா திடர்.


படிக நிறமும் பவளச்செவ் வாயும்
கடிகமழ்பூந் தாமரைபோற் கையுந் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்
கல்லுஞ்சொல் லாதோ கவி.


கலித்துறை
சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்
றார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற்
பார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள்
வார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே. .. 1


வணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்
சுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனே
பிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்
உணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கு முரைப்பவளே. .. 2


உரைப்பா ருரைக்குங் கலைகளெல்லா மெண்ணி லுன்னையன்றித்
தரைப்பா லொருவர் தரவல்ல ரோதண் டரளமுலை
வரைப்பா லமுதுதந் திங்கெனை வாழ்வித்த மாமயிலே
விரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே. .. 3


இயலா னதுகொண்டு நின்றிரு நாமங்க ளேத்துதற்கு
முயலா மையாற்றடு மாறுகின்றே னிந்த மூவுலகும்
செயலா லமைத்த கலைமகளே நின்றிரு வருளுக்கு
அயலா விடாம லடியேனையு முவந் தாண்டருளே. .. 4


அருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத் தழகெறிக்கும்
திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்
இருக்கோ துநாதனுந் தானுமெப் போதுமினி திருக்கு
மருக்கோல நாண்மல ராளென்னை யாளு மடமயிலே. .. 5


மயிலே மடப்பிடியே கொடியே யிளமான் பிணையே
குயிலே பசுங்கிளியே யன்னமே மனக்கூ ரிருட்கோர்
வெயிலே நிலவெழு மேனிமின் னேயினி வேறுதவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவே னுனதுபொற் பாதங்களே. .. 6


பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்
வேதாந்த முத்தியுந் தந்தருள் பாரதிவெள் ளிதழ்ப்பூஞ்
சீதாம் புயத்தி லிருப்பா ளிருப்பவென் சிந்தையுள்ளே
ஏதாம் புவியிற் பெறலரி தாவதெனக் கினியே. .. 7


இனிநா னுணர்வ தெண்ணெண் கலையாளை இலகுதொண்டைக்
கனிநாணுஞ் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலவயன்
றனிநாயகியை யகிலாண்ட மும்பெற்ற தாயைமணப்
பனிநாண் மலருறை பூவையை யாரணப் பாவையையே. .. 8


பாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா
மேவுங் கலைகள் விதிப்பா ளிடம்விதியின் முதிய
நாவும் பகர்ந்ததொல் வேதங்க ணான்கு நறுங்கமலப்
பூவுந் திருப்பதம் பூவா லணிபவர் புந்தியுமே. .. 9


புந்தியிற் கூரிரு ணீக்கும்புதிய மதிய மென்கோ
வந்தியிற் றோன்றிய தீபமென்கோ நல்லரு மறையோர்
சந்தியிற் றோன்றுந் தபனனென் கோமணித்தா மமென்கோ
உந்தியிற் றோன்றும் பிரான்புயந் தோயு மொருத்தியையே. .. 10


ஒருத்தியை யன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை
இருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய்
கருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம்
திருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே. .. 11


தேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற
மூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும்
யாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த
பூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே. .. 12


புரிகின்ற சிந்தையி னூடே புகுந்துபுகுந் திருளை
அரிகின்ற தாய்கின்ற வெல்லா வறிவினரும் பொருளைத்
தெரிகின்ற வின்பங் கனிந்தூறி நெஞ்சந்தெ ளிந்துமுற்ற
விரிகின்ற தெண்ணெண் கலைமா னுணர்த்திய வேதமுமே. .. 13


வேதமும் வேதத்தி னந்தமு மந்தத்தின் மெய்ப்பொருளாம்
பேதமும் பேதத்தின் மார்க்கமு மார்க்கப் பிணக்கறுக்கும்
போதமும் போதவுரு வாகியெங் கும்பொதிந் தவிந்து
நாதமு நாதவண் டார்க்கும்வெண் டாமரை நாயகியே. .. 14


நாயக மான மலரக மாவதுஞான வின்பச்
சேயக மான மலரக மாவதுந் தீவினையா
லேயக மாறி விடுமக மாவது மெவ்வுயிர்க்குந்
தாயக மாவதுந் தாதார்சு வேதச ரோருகமே. .. 15


சரோருக மேதிருக் கோயிலுங் கைகளுந் தாளிணையும்
உரோரு கமுந்திரு வல்குலு நாபியுமோங் கிருள்போற்
சிரோருகஞ் சூழ்ந்த வதனமு நாட்டமுஞ் சேயிதழும்
ஒரோருக மீரரை மாத்திரை யானவுரை மகட்கே. .. 16


கருந்தா மரைமலர் கட்டாமரை மலர்கா மருதாள்
அருந்தா மரைமலர் செந்தாமரை மலரா லயமாத்
தருந்தா மரைமலர் வெண்டாமரை மலர்தாவி லெழிற்
பெருந்தா மரைமணக்குங் கலைக்கூட்டப் பிணைதனக்கே. .. 17


தனக்கே துணிபொரு ளென்னுந் தொல்வேதஞ் சதுர்முகத்தோன்
எனக்கே சமைந்த வபிடேக மென்னு மிமையவர்தா
மனக்கேத மாற்றுமருந் தென்ப சூடுமலரென் பன்யான்
கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே. .. 18


கமலந்தனி லிருப்பாள் விருப்போ டங்கரங் குவித்துக்
கமலங்கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக்
கமலந்தனைக் கொண்டுகண் டொருகாற் றங்கருத்துள் வைப்பார்
கமலங் கழிக்குங் கலைமங்கை யாரணி காரணியே. .. 19


காரணன் பாகமுஞ் சென்னியுஞ் சேர்தரு கன்னியரும்
நாரண னாக மகலாத் திருவுமொர் நான்மருப்பு
வாரணன் தேவியு மற்றுள்ள தெய்வ மடந்தையரும்
ஆரணப் பாவை பணித்தகுற் றேவ லடியவரே. .. 20


அடிவேத நாறுஞ் சிறப்பார்ந்த வேத மனைத்தினுக்கு
முடிவே தவளமுளரி மின்னே முடியா விரத்தின
வடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயலிரவின்
விடிவே யறிந்தென்னை யாள்வார் தலந்தனில் வேறிலையே. .. 21


வேறிலை யென்று னடியாரிற் கூடி விளங்குநின்பேர்
கூறிலை யானுங் குறித்துநின்றே னைம்புலக் குறும்பர்
மாறிலை கள்வர் மயக்காம னின்மலர்த்தா ணெறியிற்
சேறிலை யீந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே. .. 22


சேதிக்க லாந்தர்க்க மார்க்கங்க ளெவ்வெவர் சிந்தனையும்
சோதிக்க லாமுறப் போதிக்க லாம்சொன்ன தேதுணிந்து
சாதிக்க லாமிகப் பேதிக்க லாமுத்திதா னெய்தலா
மாதிக்க லாமயில் வல்லிபொற் றாளை யடைந்தவரே. .. 23


அடையாள நாண்மல ரங்கையி லேடு மணிவடமும்
உடையாளை நுண்ணிடை யன்று மிலாளை யுபநிடதப்
படையாளை யெவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்
தொடையாளை யல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே. .. 24


தொழுவார் வலம்வருவார் துதிப்பார் தந்தொழின் மறந்து
விழுவா ரருமறைமெய் தெரிவா ரின்பமெய் புளகித்
தழுவா ரினுங்கண்ணீர் மல்குவா ரென்கணாவ தென்னை
வழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வத்தவரே. .. 25


வைக்கும் பொருளு மில்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும்
பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்
மெய்க்கும் பொருளு மழியாப் பொருளும் விழுப்பொருளும்
உய்க்கும் பொருளுங் கலைமா னுணர்த்து முரைப்பொருளே. .. 26


பொருளா லிரண்டும் பெறலாகு மென்றபொருள் பொருளோ
மருளாத சொற்கலை வான்பொருளோ பொருள் வந்துவந்தித்
தருளாய் விளங்கு மவர்க் கொளியா யறியாதவருக்
கிருளாய் விளங்கு நலங்கிளர் மேனியிலங் கிழையே. .. 27


இலங்குந் திருமுக மெய்யிற் புளகமெழுங் கண்கணீர்
மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கு மனமிகவே
துலங்கு முறுவல் செயக் களிகூருஞ் சுழல்புனல்போல்
கலங்கும் பொழுது தெளியுஞ் சொன்மானைக் கருதினர்க்கே. .. 28


கரியா ரளகமுங் கண்ணுங் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய
சரியார் கரமும் பதமு மிதழுந்தவள நறும்
புரியார்ந்த தாமரையுந் திருமேனி யும்பூண் பனவும்
பிரியா தென்னெஞ்சினு நாவினு நிற்கும் பெருந்திருவே. .. 29


பெருந்திருவுஞ் சயமங் கையுமாகி யென்பேதை நெஞ்சில்
இருந்தருளுஞ் செஞ்சொல் வஞ்சியைப் போற்றிலெல்லாவுயிர்க்கும்
பொருந்திய ஞானந்தரு மின்பவேதப் பொருளுந் தருந்
திருந்திய செல்வந்தரு மழியாப் பெருஞ் சீர்தருமே. .. 30


சரசுவதியந்தாதி முற்றுப்பெற்றது. 

Monday, April 11, 2011

தீபம்; வாழ்வின் கலங்கரை விளக்கு







தீபம்:சில குறிப்புகள்

காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்.
இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.தீபத்தை கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு ஆகிய திசைகளை நோக்கி தீபம் ஏற்ற வேண்டும். தெற்கு முகம் பார்த்து தீபம் ஏற்றுவதை தவிர்க்கவும்.
ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும்.
நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலங்களை அடையலாம்.

புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை தீயசக்திகள் தொந்திரவுகள் அண்டாது.

பஞ்சு திரி =மங்களம் பெருகும்
வாழை தண்டு திரி =புத்திர பாக்கியம்
பட்டு நூல் திரி =எல்லாவித சுபங்களும்
ஆமண்க்கு எண்ணெய் தீபம் =அனத்து செல்வம்
தேங்காய் எண்ணெய் இல்ப்பெண்ணெய் தீபம் =தேக ஆரோக்கியம்,செல்வம்
நல்லெண்ணெய் தீபம் =எம பயம் அகலும்
தாமரை நூல் தீபம் = லக்ஷ்மி கடாக்ஷம்
நெய் தீபம் = சகல சௌபாக்யம்

வெண்கல விளக்கு = பாவம் அகலும்
அகல் விளக்கு = சக்தி பெருகும்
எவெர் சில்வர் தவிர்க்கவும்.

தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதகூடாது.

தீப சரஸ்வதி என்று மூன்று முறையும்
தீப லக்ஷ்மி என்று மூன்று முறையும்
தீப துர்கா என்று மூன்று முறையும்
குல தெய்வத்தை நினைத்து மூன்று முறையும் என
தீபத்தை பன்னிரண்டு முறை வணங்க வேண்டும்.

 தீபம் வெறும் விளக்கு அல்ல.நம்  வாழ்வின் கலங்கரை விளக்கு.
மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம்.   
தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம்.